
மலேசிய இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் ‘BAKAT MADANI’ என்ற தேசிய முன்னெடுப்பை பிரதமர் அன்வார் இப்ராஹிம் நெகிரி செம்பிலானின் செண்டாயானில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

அரசுடன் இணைந்து GLIC, GLC நிறுவனங்கள் மற்றும் PETRONAS ஆகியவற்றின் ஒத்துழைப்பில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம், 2026 முதல் 2027 வரை 25,000 இளைஞர்கள் மற்றும் பயனாளிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளைப் பெற உள்ளனர்.

இந்த முயற்சி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மட்டுமல்லாமல், சமூகப் பின்னணி எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு மலேசிய இளைஞருக்கும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், வாழ்க்கையில் முன்னேறவும் சமமான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
“அனைவரும் வாழ்க்கையை ஒரே தொடக்கப் புள்ளியில் இருந்து ஆரம்பிப்பதில்லை. எனவே திறமைகளை வளர்க்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்தி, யாரும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தில் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்வது MADANI அரசின் பொறுப்பாகும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த தேசிய முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுக்க பங்களித்த அனைத்து மூலோபாய கூட்டாளர்களுக்கும் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், BAKAT MADANI மலேசியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் அறிவார்ந்த, திறமையான, ஒழுக்கமிக்க மற்றும் தன்னம்பிக்கை மிக்க புதிய தலைமுறையை உருவாக்கும் முக்கிய தளமாக அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

