
மலேசியாவின் திரைப்படம் மற்றும் படைப்புத் துறையின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், டாமன்சாரா டாமாயில் அமைக்கப்பட்டுள்ள மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான FINAS-இன் புதிய கோபுரத்தை பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் திரைப்படம், கலை மற்றும் கலாச்சாரத் துறைகள் தொடர்ந்து வளர்ச்சியடைவதை உறுதி செய்ய அரசாங்கத்தின் ஆதரவு மிகவும் அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக, திரைத்துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்துறையினரின் நலன்களுக்கும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

FINAS கோபுரத்தில் நவீன டிஜிட்டல் திரையரங்கம், பயிற்சி வசதிகள், திரைப்பட அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 81,000-க்கும் அதிகமான ஒலி-ஒளி காப்பகப் பதிவுகளும் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ’ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங், தொடர்புத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலிம் ஹம்சா, FINAS தலைவர் டத்தோ ஹான்ஸ் ஐசக் மற்றும் JAPEN தலைமை இயக்குநர் எர்வின் கைருல் அஹ்மத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புத்துறை அமைச்சின் கீழ் செயல்படும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு, நாட்டின் படைப்புத் துறையின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, JAPEN, படைப்புத் துறை தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு துல்லியமாகவும், தெளிவாகவும், எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் தொடர்ந்து வழங்கி வருகிறது.


