Friday, May 15, 2026
HomeFashionமாணவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கான மாற்றத்தின் சக்தி – பிரதமர் வலியுறுத்தல்

மாணவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கான மாற்றத்தின் சக்தி – பிரதமர் வலியுறுத்தல்

University of Malaya வளாகத்தில் இந்திய மாணவர்களுடன் நடைபெற்ற பிரதமரின் நட்புறவு நிகழ்ச்சியில், மாணவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கும் புதுமைக்கும் முக்கியமான மாற்றத்தின் முகவர்களாக தொடர வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

அறிவு, நல்லொழுக்கம் மற்றும் முதிர்ந்த சிந்தனையின் அடிப்படையில் மாணவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றும், இன, மத, பின்னணி வேறுபாடுகளை தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் புதிய சக்தியாக இளைஞர்கள் உருவெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் குறுகிய இனவாத அரசியலை இளைஞர்கள் உறுதியாக நிராகரிக்க வேண்டும் என்றும், மலேசியாவின் எதிர்காலம் இளைஞர்களின் துணிச்சலிலும் ஒற்றுமையை கட்டியெழுப்பும் மனப்பாங்கிலும் தங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“ஒற்றுமையான, நிலையான மற்றும் வளர்ச்சியடைந்த மலேசியாவை உருவாக்க, பிரிவினை அரசியலின் இனவாத சுவர்களை உடைத்து, சகோதரத்துவத்தின் பாலங்களை அமைப்பது இன்றைய தலைமுறையின் கடமையாகும்,”என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அதேவேளை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் அனைத்து மக்களுக்கும் நலன் வழங்கும் கொள்கைகளை Malaysia MADANI அரசு தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், இனம் மற்றும் மத எல்லைகளைத் தாண்டி அனைவருக்கும் நலனும் நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே MADANI கொள்கையின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் போது, MITRA வழியாக ஏழை மற்றும் பின்தங்கிய இந்திய சமூகங்களை மேம்படுத்துவதற்காக கூடுதலாக RM50 மில்லியன் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இவ்வாண்டுக்கான மொத்த ஒதுக்கீடு RM150 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடு இந்திய சமூகத்தின் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular