Sunday, August 23, 2026
spot_img
Homeஇந்திய சமூகத்திற்கு மேலும் RM6.7 மில்லியன் நிதியுதவி

இந்திய சமூகத்திற்கு மேலும் RM6.7 மில்லியன் நிதியுதவி

மலேசிய இந்திய சமூகத்தின் கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூக மேம்பாட்டை வலுப்படுத்தும் வகையில், மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (MITRA) மூலம் மொத்தம் RM6.7 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், Madani Tuition, Uyarvu Madani மற்றும் Dharma Madani ஆகிய மூன்று திட்டங்களின் கீழ் இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

2,343 மாணவர்களுக்கு Madani Tuition

Madani Tuition திட்டத்தின் கீழ், 28 பயிற்சி மையங்களுக்கு RM2.63 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு SPM மற்றும் STPM தேர்வுகளுக்குத் தயாராகும் 2,343 இந்திய மாணவர்கள் பயனடைவார்கள்.

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை நடைபெறும் இத்திட்டம், ஏழு மாநிலங்களில் உள்ள இந்திய மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியை வழங்குவதுடன், கல்வித் தயாரிப்புக்கான குடும்பங்களின் நிதிச்சுமையையும் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

“மாணவர்கள் வழங்கப்படும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, முயற்சி மற்றும் ஒழுக்கத்துடன் படித்தால் எதுவும் சாத்தியமற்றது அல்ல. இந்த முயற்சியை அனைத்து மாணவர்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என ரமணன் தெரிவித்தார்.

128 தொழில்முனைவோருக்கு RM3.05 மில்லியன்

இதனிடையே, Uyarvu Madani திட்டத்தின் கீழ் 128 இந்திய தொழில்முனைவோருக்கு RM3.05 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 91 பேர் Micro பிரிவிலும், 29 பேர் Growth பிரிவிலும், எட்டு பேர் High பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரிவைப் பொறுத்து RM50,000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஏற்கனவே லாபகரமாக இயங்கி வரும், ஆனால் நிதி கட்டுப்பாடுகள் காரணமாக தங்களது தொழிலை விரிவுபடுத்த முடியாத தொழில்முனைவோருக்கு இந்த உதவி வழங்கப்படுவதாக ரமணன் கூறினார்.

“தொழில் ஏற்கனவே வருமானம் ஈட்டுகிறது. ஆனால் சில சூழ்நிலைகள் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக வளர முடியாமல் உள்ளது. அடுத்த கட்டத்திற்குச் செல்ல தேவையான உதவியை வழங்குவதே இந்த நிதியின் நோக்கம்,” என்றார்.

2026ஆம் ஆண்டில் Uyarvu Madani திட்டத்திற்காக மொத்தம் RM25 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 700 தொழில்முனைவோர் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல் கட்டத்தில் தேர்வு செய்யப்படாதவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், மதிப்பீடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அடுத்தடுத்த கட்டங்களில் வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்றும் ரமணன் கூறினார்.

52 இந்து ஆலயங்களுக்கு RM1.04 மில்லியன்

Dharma Madani திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ், 52 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு RM1.04 மில்லியன்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி மத, கலாசார, ஆன்மிக மற்றும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த பயன்படுத்தப்படும்.

“வழிபாட்டுத் தலங்கள் பிரார்த்தனை செய்வதற்கான இடங்கள் மட்டுமல்ல. அவை சமூக ஒற்றுமை, ஒழுக்கக் கல்வி, கலாசார நடவடிக்கைகள் மற்றும் சமூகத் திட்டங்களுக்கான மையங்களாகவும் செயல்படுகின்றன,” என ரமணன் தெரிவித்தார்.

இதுவரை Dharma Madani திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 676 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு RM13.52 மில்லியன்நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 1,000 பதிவு செய்யப்பட்ட ஆலயங்களை சென்றடைவதே இலக்கு என்றும் அவர் கூறினார்.

இந்திய சமூகத்திற்காக RM150 மில்லியன் ஒதுக்கீடு

கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூக மேம்பாடு ஆகிய மூன்று துறைகளையும் மையமாகக் கொண்டு இந்திய சமூகத்தை முன்னேற்றுவதே MITRA-வின் விரிவான அணுகுமுறை என ரமணன் தெரிவித்தார்.

இந்த நோக்கத்திற்காக 2026ஆம் ஆண்டில் MITRA-வுக்கு RM150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“மேலும் பல இந்திய இளைஞர்கள் கல்வியில் வெற்றி பெற வேண்டும். அதிகமான இந்திய தொழில்முனைவோர் தங்கள் தொழில்களை விரிவுபடுத்த வேண்டும். அதேபோல், வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து சமூகத்திற்கு வலுசேர்க்க வேண்டும்.

இந்திய சமூகத்தின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாகவும், கட்டமைக்கப்பட்டதாகவும், தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைய அரசாங்கம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது,” என ரமணன் கூறினார்.

RELATED ARTICLES

Most Popular