Sunday, August 23, 2026
spot_img
Homeநெகிரி செம்பிலானில் இந்தியர்களின் நலனில் நேரடி கவனம் செலுத்துவேன் – பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதி

நெகிரி செம்பிலானில் இந்தியர்களின் நலனில் நேரடி கவனம் செலுத்துவேன் – பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதி

நெகிரி செம்பிலானில் இந்திய சமூகத்தினருடன் நடைபெற்ற சந்திப்பில், அவர்களின் கருத்துகள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்திய சமூகத்திற்கும் அரசின் அனைத்து திட்டங்களும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே மடானி அரசின் உறுதியான நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.

“ஒரு மலாய் தலைவராகவும், முஸ்லிமாகவும், மலேசியா எப்போதும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையுடன் திகழ வேண்டும் என்று விரும்புகிறேன். இனம், மதம் பாராமல் அனைத்து குடிமக்களும் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும், வளமான வாழ்க்கையுடனும் வாழ வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்திய சமூகத்தை புறக்கணிக்காமல், MITRA மூலம் அதிகாரமளித்தல், கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் உருவாக்கம், இளைஞர் வளர்ச்சி மற்றும் சமூக நலத் திட்டங்கள் வழியாக பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் மாநில அரசும் முதலமைச்சர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தலைமையில் கல்வி, பொருளாதாரம், சமூக நலன் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய சமூகத்திற்கு பயனளிக்கும் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக பிரதமர் பாராட்டினார்.

மேலும், மத்திய அரசின் மட்டத்தில் இந்திய சமூகத்தின் விவகாரங்களை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ராமநன் ராமகிருஷ்ணனுடன் இணைந்து நேரடியாக கண்காணித்து, எழும் பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, நெகிரி செம்பிலானில் வாழும் இந்திய சமூகத்தினர் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் (HARAPAN) கூட்டணிக்கு ஆதரவு வழங்குமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

“மக்களின் நம்பிக்கையும் ஆதரவும் தொடர்ந்தால், முன்னேற்றம், சமத்துவம் மற்றும் வளமான மலேசியாவை அனைத்து மக்களும் அனுபவிக்கும் வகையில் மடானி அரசு இன்னும் தீவிரமாக பணியாற்றும்,” என்று அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular